மத்திய அமைச்சரவை ஒப்புதல்கள் (Cabinet Approves)
2ம் கட்ட பசுமை மின்சக்தி வழித்தடம்
தமிழகம் உட்பட மாநிலங்களுக்கு இடையேயான பகிர்வு அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி:
இரண்டாம் கட்ட பசுமை மின்சக்தி வழித்தடம் அமைப்பதில் தமிழகம் உட்பட மாநிலங்களுக்கு இடையேயான பகிர்வு அமைப்புக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் சுமார் 10,750 சுற்று கி.மீ தூரத்துக்கு மின்பகிர்மான வழித்தடம் மற்றும் சுமார் 27,500 மெகா வோல்ட்-ஆம்பியர் அளவுக்கு மின்பரிமாற்ற திறன் கொண்ட துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும். இத்திட்டம் குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடையே மின்தொகுப்பு ஒருங்கிணைப்புக்கும் மற்றும் சுமார் 20 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை அனுப்பவும் உதவும்.
இத்திட்டம் மொத்தம் ரூ.12,031.33 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது மற்றும் இதில் மத்திய நிதி உதவி, திட்ட செலவில் 33 சதவீதமாக அதாவது ரூ.3970.34 கோடியாக இருக்கும். இந்த மின்பகிர்வு அமைப்பு 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் வரை 5 ஆண்டு காலத்தில் அமைக்கப்படும். மத்திய அரசின் நிதியுதவி, மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வு கட்டணங்களை ஈடுசெய்யவும், மின்சாரத்தை குறைந்த விலையில் வைத்திருக்கவும் உதவும். மத்திய அரசின் உதவியால், நாட்டு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் கிடைக்கும். இத்திட்டம் 2030ம் ஆண்டுக்குள், 450 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் அமைக்கும் இலக்குக்கு உதவும்.
இத்திட்டம், நாட்டின் நீண்ட கால மின்சக்தி பாதுகாப்புக்கும் மற்றும் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதன் மூலம் நிலையான சுற்றுச்சூழல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும். மேலும், இத்திட்டம் மின்சாரம் மற்றும் இது தொடர்பான துறைகளில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.
முதல்கட்ட பசுமை மின்சக்தி வழித்தட திட்டம் ஆந்திரபிரதேசம், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு வருகிறது. 24 ஜிகாவாட் திறனுள்ள புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டம் 2022ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
👀👀 💐 👀👀
பேரிடர் மேலாண்மை துறையில் இந்தியா மற்றும் துர்க்மெனிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி:
பேரிடர் மேலாண்மைத் துறையில் இந்தியா மற்றும் துர்க்மெனிஸ்தான் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பேரிடர் மேலாண்மை செயல்முறைகளால் பயனடைவதோடு, பேரிடர் மேலாண்மைத் துறையில் தயார்நிலை, எதிர்வினை மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த இயலும் .
பின்வரும் துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் அடிப்படையிலான ஒத்துழைப்பிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது:
i. அவசரநிலைகளைக் கண்காணித்தல், முன்னறிவித்தல் மற்றும் விளைவுகளை மதிப்பீடு செய்தல்
ii. பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கிடையே, திறமையான அதிகாரிகள் மூலம் தொடர்ப
iii ஆராய்ச்சித் திட்டங்களின் கூட்டுத் திட்டமிடல், மேம்பாடு மற்றும் செயல்படுத்தல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வெளியீடுகளின் பரிமாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் ஆராய்ச்சிப் பணிகளின் முடிவுகள்
iv. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எல்லைக்குள் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட தகவல், பருவ இதழ்கள் அல்லது வேறு ஏதேனும் வெளியீடுகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் , அத்துடன் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் பரிமாற்றம்
v. தொடர்புடைய துறைகளில் கூட்டு மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், மற்றும் பயிற்சிகளை ஏற்பாடு செய்தல்;
vi. பேரிடர் மேலாண்மையில் நிபுணர்கள் மற்றும் அனுபவங்களின் பரிமாற்றம்
vii. தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் முதலில் வருபவர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு; பேரிடர் மேலாண்மை துறையில் திறன் வளர்ப்பை எளிதாக்குவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் பரிமாற்றம்
viii. தொழில்நுட்ப வசதிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கு பரஸ்பரம் ஒப்புக்கொண்டபடி உதவிகளை வழங்குதல், முன்னெச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பேரிடர் மேலாண்மையில் திறனை மேம்படுத்துதல்
ix. பரஸ்பரமாக ஒப்புக்கொண்டபடி, அவசரகால எதிர்வினையில் உதவி வழங்குதல்
x. பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் பரஸ்பர பகிர்வு
xi. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளின்படி பரஸ்பரம் ஒப்புக்கொண்டபடி தர மேலாண்மை அமைப்புகளை வழங்குதல்
xii பேரிடர் மேலாண்மை தொடர்பான பிற நடவடிக்கைகள், தகுதிவாய்ந்த அதிகாரிகளால் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்படலாம்
தற்போது வரை, சுவிட்சர்லாந்து, ரஷ்யா,, ஜெர்மனி, ஜப்பான், தஜிகிஸ்தான், மங்கோலியா, பங்களாதேஷ், இத்தாலி ஆகிய நாடுகள் மற்றும் சார்க் அமைப்புடனும் பேரிடர் மேலாண்மை துறையில் ஒத்துழைப்புக்கான இருதரப்பு / பலதரப்பு ஒப்பந்தம் / புரிந்துணர்வு ஒப்பந்தம் / கூட்டு ஒப்பந்தம் / ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவற்றில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
👀👀 💐 👀👀
சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கு இந்தியா-ஸ்பெயின் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கு இந்தியா-ஸ்பெயின் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பயன்கள்:
சுங்க வரி ஏய்ப்பு குற்றவாளிகளைப் பிடிக்கவும், இது தொடர்பான குற்றங்களைத் தடுக்கவும், புலனாய்வு செய்யவும் தேவையான, ரகசிய தகவல்களை நம்பகமான முறையில் விரைவாகவும், குறைந்த செலவிலும் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும்.
இரு நாடுகளின் சுங்கவரி அதிகாரிகளும் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான சட்ட நடைமுறைகளை இந்த ஒப்பந்தம் வழங்குவதுடன், சுங்கவரி சட்டங்களை முறையாக செயல்படுத்தவும், சுங்க குற்றங்களை கண்டுபிடித்தல், புலனாய்வு செய்தல் மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கு உதவிகரமாக இருக்கும்.
👀👀 💐 👀👀
மஹாகாளி ஆற்றின் குறுக்கே தார்சுலா (இந்தியா) – தார்சுலா (நேபாளம்) இடையே பாலம் கட்டுவதற்காக இந்தியா-நேபாளம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மஹாகாளி ஆற்றின் குறுக்கே தார்சுலா (இந்தியா) – தார்சுலா (நேபாளம்) இடையே பாலம் கட்டுவதற்காக இந்தியா-நேபாளம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம், இரு நாடுகளிடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும்.
👀👀 💐 👀👀
No comments
Thank you for your comments