மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு
சென்னை, ஜன.7-
மதுரையில் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருந்த நிலையில், பிரதமரின் தமிழக நிகழ்ச்சிகள் கொரோனா தடுப்பு ஊரடங்கு நடவடிக்கையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவள்ளூர், நாகை, கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி ஜனவரி 12-ம்தேதி தமிழ்நாடு வர இருக்கிறார்.
விருதுநகரில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கலந்துகொள்ள இருக்கிறார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாகவும் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகம் வரவிருந்த பிரதமர் மோடி, புதுச்சேரி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள இருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்திருந்தார்.
பிரதமர் வருகை ஒத்திவைப்பு
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். கொரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
No comments
Thank you for your comments