Breaking News

கழிவறை, சுடுகாட்டில்தான் 'அம்மா கிளினிக்' இருந்தது... போட்டு உடைத்த அமைச்சர் மா.சு.,- கடுப்பான இபிஎஸ்

அதிமுக எம்எல்ஏக்கள் தயார் என்றால் நேரில் சென்று அதனை காட்ட நானும் தயார்

சென்னை, ஜன.7-

சட்டப்பேரவை விவாத நேரத்தில், அம்மா கிளினிக் மூடல் அறிவிப்பு பற்றி காரசார விவாதம் நடைபெற்றது. 


தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம கலைவாணர் அரங்கத்தில் துவங்கியது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதையடுத்து நேற்று 2-வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக கேள்வி - பதில் நேரம் நேரலையக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கேள்வி - பதில் நேரம், வேதா இல்லம் தொடர்பான காரசார விவாதம் உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்பட்டது. 

இந்நிலையில் அம்மா கிளினிக் மூடல் அறிவிப்பு பற்றி காரசார விவாதம் நடைபெற்று உள்ளது. 

சட்ட பேரவை விவாத நேரத்தில் , அமைச்சர் மா.சுப்ரமணியன், ''சைதாப்பேட்டையில் கழிவறை, சுடுகாட்டில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டிருந்தது. அதிமுக எம்எல்ஏக்கள் தயார் என்றால் நேரில் சென்று அதனை காட்ட நானும் தயார்'' என்றார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், ''அமைச்சரின் பேச்சை அவைகுறிப்பில் இருந்து நீக்கவேண்டும்'' என வலியுறுத்தினார். 

அதனைத்தொடர்ந்து முதல்வர், ''அதிமுக ஒரு குழுவை ஏற்பாடு செய்தால் அம்மா மினி கிளினிக் இருந்த இடத்தை அமைச்சர் காட்ட தாயார்'' என்றார். அம்மா கிளினிக் மூடல் அறிவிப்பு பற்றி அமைச்சர் , எதிர்கட்சி தலைவர் பேசிய விவாதம் கார சாரமாக அமைத்தது.

முன்னதாக அம்மா மினி கிளினிக் என்பது தற்காலிக அமைப்புதான் என்றும் தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். 

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன. அம்மா மினி கிளினிக்குகள் ஓராண்டு அடிப்படையில் தற்காலிகமாகவே தொடங்கப்பட்டன. அம்மா மினி கிளினிக்குகளில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. செவிலியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. 

அம்மா மினிகிளினிக்கில் பணியாற்றிய 1820 மருத்துவர்கள் தற்போது கொரோனா பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார். மார்ச் மாத இறுதி வரை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பின்னர் அவர்களுக்கு மாற்றுப்பணியிடம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா தொற்று அதிகரிக்கவே, அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு சிகிச்சை பணிக்கு மாற்றப்பட்டனர். 

இதனையடுத்து தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் தற்காலிகமாக மூடப்பட்டதாக கடந்த ஆட்சியில் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. தற்காலிகமாக மூடப்பட்டாலும் துணை சுகாதார நிலையங்கள் வழக்கம்போல செயல்படும் என்று கூறினர். கொரோனா தடுப்பு பணிகள் முடியும் வரை மினி கிளினிக்குகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் முதல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் அம்மா மினி கிளினிக் திறப்பது பற்றிய அறிவிப்புகள் வெளியாகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்றைய கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் , பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்  என்று  முக்கிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments