மருத்துவ மேல் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கும் ஒதுக்கீடு செல்லும்- தனி நீதிபதி தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது
சென்னை:
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்குக்கான 50% ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள், 30% வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கலந்து கொள்ளலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.
கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு, எம்.டி, எம்.எஸ் போன்ற மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடும், 30 சதவீதம் ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படும் என கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனியார் மருத்துவர் பார்க்கவியான் தொடர்ந்த வழக்கில், தமிழகம் முழுவதும் உள்ள முதுகலை மருத்துவப் படிப்பில் 1968 இடங்கள் உள்ளது.
இதில் 50 சதவீதம் அகில இந்திய இட ஒதுக்கீடுக்கு சென்றுவிடுகிறது. மீதமுள்ள 969 இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
ஊக்க மதிப்பெண் வழங்குவதால் மீதமுள்ள 50 சதவீத இடங்களும் அரசு மருத்துவர்களுக்கே சென்றடைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால், தனியார் மருத்துவ கல்லூரிகளில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது.
அதனால், இட ஒதுக்கீடு அல்லது ஊக்க மதிப்பெண் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு சலுகையை மட்டும் அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை தனி நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தபோது தமிழக அரசு மற்றும் அரசு மருத்துவர் சார்பில் ஊக்க மதிப்பெண்ணை தகுதியாகதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்களில், மலைப்பகுதி அணுக முடியாத பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிவதாகவும், இதனால் பொதுமக்கள் தான் பயன்பெறுவதாகவும் தெரிவித்தனர்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம். தண்டபாணி, கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு இரண்டு சலுகைகளும் வழங்க எந்த தடையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் பார்க்கவியான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபத்யாய் மற்றும் சத்திக்குமார் சுகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார்.
இந்த மேல்முறையீட்டு மனுவில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்குக்கான 50% ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள், 30% வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கலந்து கொள்ளலாம் என்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்ததுள்ளனர்.
மேலும் நடப்பு கல்வியாண்டில் இந்த இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண்கள் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவில் கூறியுள்ளனர்.
No comments
Thank you for your comments