வறட்சியால் தண்ணீரின்றி இறக்கும் ஒட்டகச் சிவிங்கிகள்
நைரோபி:
கென்யாவில் வறட்சி காரணமாக தண்ணீர், உணவு கிடைக்காமல் ஒட்டகச் சிவிங்கிகள் கொத்துக்கொத்தாக இறந்து கிடக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த கென்யாவில் இந்தாண்டு பருவமழை வழக்கத்தை விட 30 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இதனால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
நீர்நிலைகள் வற்றி விட்டதால் ஒட்டகச் சிவிங்கிகள் உள்ளிட்ட பிராணிகள் தண்ணீர், உணவின்றி செத்து மடிகின்றன. சமீபத்தில் இங்குள்ள வனவிலங்கு சரணாலயத்தில் ஆறு ஒட்டகச் சிவிங்கிகள் இறந்து கிடந்தன.
இது குறித்து, இந்த சரணாலயம் அமைந்துள்ள எயிரப் கிராம நிர்வாக துணை தலைவர் அப்தி கரிம் கூறியதாவது:
வறட்சியால் நீரின்றி வனவிலங்குகள் இறப்பது அதிகரித்து வருகிறது. வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த, ஆறு ஒட்டகச் சிவிங்கிகள் தாகம் தீர்ப்பதற்காக அருகில் உள்ள வறண்ட நீர் நிலைக்கு சென்றுள்ளன. அப்போது ஒட்டகச் சிவிங்கிகளின் கால்கள் களிமண் பரப்பில் சிக்கி ஆழமாக இறங்கி விட்டதால் அவை மேலே வர முடியாமல் உணவின்றி கிடந்து சில நாட்களில் இறந்துள்ளன.
இது குறித்து தெரியவந்ததும் வறண்ட நீர் நிலை மாசுபடுவதை தவிர்க்க ஒட்டகச் சிவிங்கிகள் அங்கிருந்து அகற்றப்பட்டு, வேறிடத்தில் வைக்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.
ஒட்டகங்கள் நீரின்றி இறந்து கிடைக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி விலங்குகள் நல ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் மட்டும் 4,000 ஒட்டகச் சிவிங்கிகள், வறட்சி காரணமாக இறக்கும் ஆபத்து உள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments