முதலமைச்சர் ஸ்டாலினுடன் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சந்திப்பு
சென்னை:
முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இன்று (13-12-2021) முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்தும் பொருளாதார நிலையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவது, அவற்றிற்கான நிதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த ஆலோசனையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகம் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்க முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினருமான ரகுராம் ராஜன் இடம்பெற்றுள்ள இந்த குழு மாநில உற்பத்தி வளர்ச்சியை ஊக்குவிப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை அளித்து வருகிறது.
இதுவரை இருமுறை இந்த குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
No comments
Thank you for your comments