Breaking News

தமிழகத்தில் 7 இடங்களில் உள்ள திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் திறப்ப....

சென்னை

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் செயல்படும்  திருச்செந்தூர், திருவண்ணாமலை, மேல்மலையனூர், சோளிங்கர், மருதமலை, திருத்தணி, பழனி ஆகிய இடங்களிலுள்ள திருக்கோயில்களில்  மருத்துவ மையங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31-12-2021) திறந்து வைத்தார்.


இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர்-அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,  திருவண்ணாமலை-அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், மேல்மலையனூர்-அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சோளிங்கர்- அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், மருதமலை-அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி-அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பழனி- அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் (மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம்) ஆகிய 7 திருக்கோயில்களில் மருத்துவ மையங்களை இன்று (31.12.2021) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை புரியும் 10 திருக்கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு அத்திருக்கோயில்களில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால்  உடனுக்குடன் உயிர் காக்கும் மருத்துவ முதலுதவி அளித்திடும் வகையில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், இரண்டு பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை கொண்டு மருத்துவ மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 2021-22ஆம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும்  10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுகளுடன் கூடிய மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, திருக்கோயில் மருத்துவ மையங்களில் பணியாற்றிட தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு திருக்கோயில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக, திருச்செந்தூர்-அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,  திருவண்ணாமலை-அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், மேல்மலையனூர்-அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சோளிங்கர்- அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், மருதமலை-அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி-அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய  திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் மற்றும் பழனி- அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.

இந்த மருத்துவ மையங்களில் முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், இரத்த அழுத்த மாணி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக செயல்படும். இப்பணிக்காக ஓர் மருத்துவ மையத்திற்கு ஓராண்டிற்கு சுமார் ரூ.30 இலட்சம், வீதம் 10 திருக்கோயில் மருத்துவ மையங்களுக்கு மொத்தம் ரூ.3 கோடி திருக்கோயில் நிதியிலிருந்து செலவு செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர்  துரைமுருகன்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன்,  இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்,  காணொலிக் காட்சி வாயிலாக  மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்,  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஆர். காந்தி,  பால்வளத் துறை அமைச்சர்  சா.மு. நாசர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி. செந்தில்ராஜ்.  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்  முருகேஷ்,   விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டி. மோகன்,  இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கரபாண்டியன்,  கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன்,  திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ்,  திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச. விசாகன்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments