செய்தி மக்கள் தொடர்புத் துறை அறிவிப்புகள் குறித்து செய்தித்துறை அமைச்சர் தலைமையில் 6 மண்டல இணை இயக்குநர்களுடன் ஆலோசனைக்கூட்டம்
சென்னை:
செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் மண்டல இணை இயக்குநர்களுக்கான ஆய்வு மற்றும் அறிவிப்புகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
28.12.2021 அன்று சென்னை கலைவாணர் அரங்கவளாகத்தில் உள்ள மாநில செய்தி நிலையத்தில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் மண்டல இணை இயக்குநர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தனது தலைமை உரையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலோடு அரசின் திட்டங்கள் யாவும் மக்களுக்கு எளிதில் எடுத்துச் செல்லும் பணிகளை, செய்தித்துறையின் சார்பில் செவ்வனே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளை மேலும் செம்மைப்படுத்துகின்ற வகையில் செய்தித்துறையின் புதிய முயற்சியாக 6 மண்டல இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மண்டலங்களுக்குட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளை ஆய்வு செய்தல், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விழாக்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்கும் அரசு விழாப்பணிகளை ஒருங்கிணைத்தல், துறைவாரியான செய்தியாளர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுதல், குறிப்பாக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபங்கள் மற்றும் நினைவகங்களில் மக்கள் பயன்பாட்டினை உறுதி செய்தல் மற்றும் மாவட்டங்களில் களவிளம்பரப்பணிகளில் ஈடுபட்டுள்ள அதிநவீன எல்.இ.டி., வாகனங்களின் செயல்பாட்டினை கண்காணித்தல், தமிழரசு இதழ் சந்தாதாரர்களை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுதல். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடம் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ள மக்களைத்தேடி மருத்துவம் மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கடைக்கோடி மக்களிடமும் சென்றடைந்திட அர்பணிப்புடன் அனைவரும் பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள அறிவிப்புகள் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் செய்தித்துறையின் மானிய கோரிக்கையில் அறிவித்துள்ள அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்டார்கள்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு.மகேசன்காசிராஜன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை உரையாற்றினார்
முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் வரவேற்புரையாற்றினார் இக்கூட்டத்தில் கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கூடுதல் இயக்குநர்(செய்தி) திரு.தி.அம்பலவாணன் அவர்கள் நன்றி கூறினார்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
No comments
Thank you for your comments