கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்ட வெள்ளசேத பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு இன்று காலை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக குமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து இன்னும் வடியாமல் உள்ளது.
ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழை, ரப்பர், தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. பல இடங்களில் கால்வாய்கள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டதோடு, கடும் வெள்ளத்தால் பல சாலைகளும் சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்துக்கு அனுப்பினார்.. அதன்படி அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன் நேற்று குமரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்..
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், தோவாளையில் உள்ள பெரியகுளத்தின் கரைகளில் ஏற்பட்ட உடைப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி. பிரின்ஸ், எஸ். ராஜேஷ்குமார், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. அரவிந்த், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
நாகர்கோவில், தோவாளையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், கிருஷ்ணசாமி திருமண மண்டபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள சுமார் 75 நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
நாகர்கோவில், தேரேகாலில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கால்வாய் கரை உடைப்பு மற்றும் சாலை சேதங்களை பார்வையிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தேரேகாலில் ஆய்வின்போது சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களுடன் முதலமைச்சர் உரையாடினார்.
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வடிவீஸ்வரம், பறக்கின்காலைச் சேர்ந்த பாஸ்கரன் அவர்களது குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதலமைச்சர் அவர்கள் வெள்ளப் பாதிப்புகளை துரிதமாக சீர்செய்திடவும், நோய் தொற்று ஏற்படாவண்ணம் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு சுகாதாரத்தை பேணிக் காத்திடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகளை எவ்வித குறைபாடுமின்றி வழங்கிடவும், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், மாநகராட்சி பகுதிகளில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், மேலாங்கோட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வாழைப் பயிர் பயிரிடப்பட்டுள்ள நிலங்களை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, பயிர்சேத விவரங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
இறுதியாக கல்குளம் வட்டம், பத்மநாபபுரம் புத்தனார் கால்வாயிலில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா
ஆர்.ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ், எஸ்.ராஜேஷ்குமார், என்.தளவாய் சுந்தரம், எம்.ஆர்.காந்தி, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் பி.ஜோதி நிர்மலாசாமி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. அரவிந்த், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments