சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் புதிதாக 1,01,474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் ஆணை - முதலமைச்சர் வழங்கினார்
சென்னை
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் புதிதாக 1,01,474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று 10 பயனாளிகளுக்கு (25-11-2021) நேரில் வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் புதிதாக 1,01,474 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.11.2021) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திராகாந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம் மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம் ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியத் திட்டம், 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களின் வாயிலாக இதுவரை 33,31,263 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டங்களுக்கென 2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.4807.56 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
தற்போது, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் கோரி புதிதாக வரப்பெற்ற விண்ணப்பங்களில், மாநில அளவில் 1,01,474 தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிடும் விதமாக,
இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 48,077 பயனாளிகளுக்கும்,
இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1,359 பயனாளிகளுக்கும்,
இந்திராகாந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 4,346 பயனாளிகளுக்கும்,
மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 14,739 பயனாளிகளுக்கும்,
ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 28,209 பயனாளிகளுக்கும்,
முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2,397 பயனாளிகளுக்கும்,
ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1,732 பயனாளிகளுக்கும்,
50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 554 பயனாளிகளுக்கும்,
முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 61 பயனாளிகளுக்கும், என மொத்தம் 1,01,474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று 10 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் க. பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையர் என். வெங்கடாசலம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments