எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு சிறப்பு நேர்வாக ரூ.1 இலட்சம் பொற்கிழி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை
நவம்பர் 1 ஆம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக அனுசரிக்கும் வகையில் 110 எல்லைப் போராட்டத் தியாகிகளில், 14 பேருக்கு சிறப்பு நேர்வாக 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (1-11-2021) நேரில் வழங்கி சிறப்பித்தார்.
நவம்பர் 1 ஆம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக அனுசரிக்கும் வகையில், எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு நேர்வாக ஒவ்வொருவருக்கும் 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (1.11.2021) தலைமைச் செயலகத்தில், வழங்கிச் சிறப்பித்தார்.
இந்திய நாடு விடுதலை பெற்ற பின்பு, 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அவ்வாறு பிரிக்கப்பட்டபோது, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. அவ்வாறு பிரித்த போது, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் ஈடுபட்டு உயிர்நீத்தும், சிறை சென்றும் தியாகம் செய்துள்ளனர்.
அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகம் செய்தவர்களை நினைவு கூரும் வகையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக தமிழ்நாடு அரசு அனுசரிக்கும் வகையில், எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தியாகம் செய்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக்காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக ஒவ்வொருவருக்கும் 1 இலட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, 110 எல்லைப் போராட்டத் தியாகிகளில், 14 பேருக்கு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.
மற்ற எல்லை போராட்டத் தியாகிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வாயிலாக வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், தொழில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன்தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் செ. சரவணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments