Breaking News

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கினார் வெங்கய்யா நாயுடு

புதுடெல்லி, அக்.25-

67வது தேசிய திரைப்பட விருதுகளை புதுதில்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திங்கள்கிழமை வழங்கினார். இவ்விழாவில் தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை இந்தி திரையுல உலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் அமிதாப்பச்சன் ஏற்கனவே பெற்றுள்ளார். மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும், இயக்குனர் பாலச்சந்தருக்கும் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

இன்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  விழாவில் பங்கேற்றவர்கள் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

விருதினைப் பெற்றுக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்  தனது உரையில் கூறியதாவது, 


மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்களுக்கும், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அவர்களுக்கும், டாக்டர் வேல்முருகன் அவர்களுக்கும் அவையில் உள்ள பிரமுகர்கள் அனைவருக்கும் விருது பெற குறிப்பிட்டுள்ள அனைத்து சினிமாத் துறையினருக்கும் எனது காலை வணக்கங்கள்.  

எனக்கு வழங்கப்பட்ட இந்த சிறப்பு விருதை எனது குருவான இயக்குனர் கே. பாலசந்தர் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவரை என்றும் நான் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.  என்னுடைய சகோதரர் திரு சத்தியநாராயண ராவ் கெய்க்வாட் எனக்கு தந்தை போன்றவர். இந்த விருதை அவருக்கும் அர்ப்பணிக்கிறேன் அவர் என் மனதில் ஆன்மீகப் பண்புகள் நிலைபெறும் வகையில் வளர்த்து ஆளாக்கினார்.

அடுத்து நான் இங்கே நினைவு கூறுவது என்னுடைய நெருங்கிய நண்பர் கர்நாடகா மாநில பஸ் டிரைவர் ராஜ்பகதூர் அவர்தான் முதலில் என்னுடைய நடிப்புத் திறனை கண்டுபிடித்தவர் நான் பேருந்து கண்டக்டராக இருக்கும்பொழுது என்னை திரைப்படத்துறையில் சேரும்படி ஊக்குவித்தவர் அவர்தான். என்னுடைய திரைப்படங்களில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இணைந்து நடித்த சக நடிகர்கள், திரைப்பட வினியோகஸ்தர்கள், சினிமாத்துறையினர், பத்திரிக்கை துறையினர் ஆகியவர்களின் நான் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய ரசிகர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நான் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன் அவர்கள் இல்லாவிட்டால் நான் யாரோவாக இருந்திருப்பேன் என்னை இயக்கிக் கொண்டிருக்கும் கடவுள்கள் அவர்கள்தான். தனது ரசிகர்களுக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த் தனது உரையை முடித்துக் கொண்டு விடைபெற்றார்.

விழாவிற்கு தனது மனைவி லதா, மகள் சவுந்தர்யா ஆகியோருடன் ரஜினிகாந்த் வந்திருந்தார்.

இந்த விழாவில் அசுரன் படத்திற்கு  சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றார்.  இரு நடிகர்களுடன் விருதை அவர் பகிர்ந்து கொண்டார்.

சிறந்த இயக்குனர் விருது மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தின் இயக்குனர் பிரியதர்ஷனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகருக்கான விருது தமிழ் நடிகர் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக பெற்றார்.

பல்லவி ஜோஷி ஆஸ்கர் வைல்ட் என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றார்.

சிறந்த திரைப்படத்துக்கான விருது அரபிக்கடலின் சிங்கம் மரைக்காயர் என்ற படத்துக்கு வழங்கப்பட்டது.


சிறந்த நடிகை விருது கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்பட்டது.

சிறப்பு ஜூரி விருது ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஒலிக்கலவை விருதும் இந்தப் படத்துக்கு ரசூல் பூக்குட்டிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த தமிழ் பட விருது அசுரன் படத்துக்கு வழங்கப்பட்டது.

No comments

Thank you for your comments