லக்கிம்பூர் கேரி செல்லும் வழியில் பிரியங்கா காந்தி கைது..!
சீதாபூர் :
லக்கிம்பூர் கேரியில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்ற பிரியங்கா காந்தி வழியில் சீதாபூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஹர்கவோன் போலீசார் பிரியங்கா காந்தியை வழியில் தடுத்து நிறுத்த முயன்றனர். என்னை நான் செல்லும் பாதையில் செல்ல விடாமல் தடுப்பதற்கான உத்தரவு உங்களிடம் இருக்கிறதா? அல்லது என்னை கைது செய்வதற்கான வாரண்டு உங்களிடம் இருக்கிறதா? இந்த இரண்டும் இருந்தால் என்னிடம் கொடுங்கள் நான் பார்க்கிறேன் என்று பிரியங்கா வலியுறுத்தினார்.
போலீசார் அவர் சொல்வதை காதில் வாங்காமல் பிரியங்காவை கைது செய்வதில் குறியாக இருந்தனர். ஆனால் பிரியங்கா அதற்கு உடன்படவில்லை என்னை கைது செய்வதற்கான அரஸ்ட் வாரண்டை காண்பியுங்கள் இல்லை என்றால் என்னை நான் செல்லும் பாதையில் என்னை போக விடுங்கள் என்று பிரியங்கா வாதிட்டார்.
ஆனால் போலீசார் அவர் பேசுவதை கேட்காமல் அவர் இரண்டு கைகளையும் பிடித்து கொண்டு இழுத்துச் சென்று கைது செய்தனர்
பிரியங்கா கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் டிவிட்டரில் ராகுல்காந்தி செய்தி ஒன்றை பதிவு செய்தார். ”நீ துவங்கிய போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டாய் என்பதை நான் நன்றாக அறிவேன். அவர்கள் உன் தைரியத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள். இந்திய விவசாயிகள் தாங்கள் துவக்கியுள்ள போராட்டத்தில் வெற்றி பெற நாம் அவர்களுக்கு உதவியாக செயல்படுவோம் என்று ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தன்னுடைய வீட்டிலிருந்து லக்கிம்பூர் செல்வதற்காக புறப்பட்டதும் அவரது காரை சாலையில் குறுக்கே மறித்த போலீசார் அவர் லக்கிம்பூர் செல்லக் கூடாது என்று தடுத்தனர். அதைத்தொடர்ந்து அந்த இடத்திலேயே தனது காரில் இருந்து இறங்கிய அகிலேஷ் யாதவ் சாலையின் குறுக்கே அமர்ந்து தர்ணா போராட்டத்தை மேற்கொண்டார்.
பிரிட்டிஷார் காலத்தில் கூட இந்திய விவசாயிகளின் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது இல்லை. ஆனால் யோகி ஆட்சிக்காலத்தில் உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். லக்கிம்பூர் வழியில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா 2 கோடி வழங்கப்பட வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார்.
இதேபோல பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி லக்கிம்பூர் கேரி செல்ல புறப்பட்டார் அவரும் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் விமானம் மூலம் உத்தரப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தார். அவரது விமானம் தரை இறங்குவதற்கு முன்னால் அவருக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் தரை இறங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக செய்தி அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது விமானம் தரையில் இறங்காமலேயே திரும்பிச் சென்றது.
லக்கிம்பூர் கேரி அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் அனுமதி மறுத்த போலீசார் சம்யுக்த கிசான் மோர்ச்சா பேச்சாளர் ராகேஷ் டிகைத் மட்டும் செல்ல அனுமதித்தனர்.
கார் நசுக்கியதால் உயிர் இழந்த விவசாயிகள் உடலை, உடற்கூறு பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதற்காக போலீசார் முயன்றபோது அங்கு கூடியிருந்த விவசாயிகள் எங்கள் தலைவர்கள் வந்த பிறகு நீங்கள் உடலை எடுத்துச் செல்லலாம், அதுவரை நீங்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று மறுத்து விட்டனர்.
அதனால் லக்கிம்பூர் கேரி செல்வதற்கு அனுமதி அளித்த போலீசார் அவர் லக்கிம்பூர் கேரி வந்து சேர்ந்ததும் இறந்த விவசாயிகளின் உடல்களை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கும்படி கோரினார்கள்.
போலிசார் கோரிக்கை குறித்து தற்பொழுது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது இதற்கிடையில் சம்யுக்த கிசான் சார்பில் லக்கிம்பூர் கேரி மாவட்ட மாஜிஸ்திரேட் அரவிந்த் சௌராசியாவிடம் லகிம்பூர் கேரியில் நடந்த சம்பவம் குறித்து புகார் மனு ஒன்று தரப்பட்டது.
அந்த மனுவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அமைச்சரின் மகன் செலுத்தி வந்த கார் விவசாயிகளை நசுக்கி கொன்றதால் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் அசிஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து பதவியில் உள்ளஉச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரை க்கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது இதற்கிடையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறைச்சம்பவங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த சம்யுக்த கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.
No comments
Thank you for your comments