மக்களின் மனித உரிமைகளை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது
புதுடெல்லி, அக்.13-
குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28 ஆவது நிறுவன தினத்தை ஒட்டி பிரதமர் மோடி காணொலியில் உரையாற்றினார். அப்போது இதைத் தெரிவித்த அவர், மனித உரிமை என்பதை பலர் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு முடிவு செய்கின்றனர் என்று விமர்சித்தார். இந்த மனோபாவம் மனித உரிமைகளுக்கு பெரும் சேதம் விளைவிப்பதாக அவர் கூறினார். பெண்கள் 24 மணி நேரமும் வேலை செய்வதற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
பணியாற்றும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 26 வார கால மகப்பேறு விடுப்பு இந்தியாவில் வழங்கப்படுவதாகவும், வளர்ந்த நாடுகளில் கூட இந்த சலுகை வழங்கப்படுவதில்லை எனவும் மோடி குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளாக, சமூகத்தின் பல பிரிவுகளில் நிலவிய அநீதி அகற்றப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் வேண்டும் என முஸ்லீம் பெண்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் என்ற அவர், அதை இயற்றி முஸ்லீம் பெண்களுக்கு புதிய உரிமைகளை தமது அரசு வழங்கியதாக தெரிவித்தார்.
No comments
Thank you for your comments