Breaking News

சிப்காடில் அமைந்துள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை அமைச்சர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காடில் அமைந்துள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை மாண்புமிகு தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காடில் அமைந்துள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை இன்று (18.10.2021) மாண்புமிகு தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சி.வி.கணேசன் அவர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு. K.வீரராகராவ், இ.ஆ.ப. மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி இஆ.ப., ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மாணவர்கள் சேர்க்கை மற்றும் வகுப்புகளின் விவரங்களை பிரிவு வாரியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொழிற் பிரிவு ஆய்வின் போது சுமார் 20 லட்சம் மதிப்புள்ள Welding Training Simulator கருவியினை மாணவர்களின் நலன் கருதி உடனடியான பெற்று தருவதாக உறுதியளித்துள்ளார். தற்போது இந்திலையத்தில் சுமார் 72 மாணவர்கள்  பயிற்சி பெற்று வருகின்றனர், 2021-ம் ஆண்டு சேர்கையில் சுமார் 118 மாணவர்கள் இதுநாள் வரை சேர்க்கை செய்யப்பட்டு 20-ம் தேதி முதல் தொழிற் பயிற்சியில் இணையவுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தொழில் பயிற்சி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது...

மாண்புமிகு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி படித்த ஏழை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாட்டில் இருக்ககூடிய 90 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சுமார் 25,000 மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள் இங்கு படிக்கக்கூடிய அந்த மாணவர்களுக்கு உறுதியாக நமது தமிழ்நாடு முதல்வர் அவர்கள் பயிற்சி முடித்த உடனேயே பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை உருவாக்கி தரக்கூடிய நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் பார்வையிட்டு அந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் இருக்க கூடிய தேவையான உபகரணங்கள் வாங்கி கொடுப்பது, தேவையான கட்டிட வசதி ஏற்படுத்துவது, சில தொழில் பயிற்சி நிலையங்களில் தொடங்கி 40 மற்றும் 50 ஆண்டுகள் முடிந்து விட்ட காரணத்தால் அங்கு தேவையான கட்டடங்களை புதிதாக கட்டுவது, கட்டடங்களை புனரமைப்பு செய்வது மற்றும் தற்கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய துறைகளை துவக்குவது போன்ற பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவினை ஏற்று தமிழ்நாடு முழுவதும் 90 பயிற்சி நிலையங்களில் சென்று ஆய்வு செய்து உடனடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இடத்திலேயே ஒப்படைத்து, வருகின்ற நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு தொழில் பயிற்சியில் 1000 மாணவர்களையாவது  படிக்கவைத்து ஆண்டிற்கு ஒரு லட்சம் மாணவர்களையாவது தயார் செய்து பல்வேறு தொழில் நிறுவனங்களில் அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்போது நானும் இத்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களோடு தொழில் பயிற்சி நிலையத்தை ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளாக எந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் தேக்க நிலையில் இருக்கின்றது, கட்டட வசதி இல்லாமல் இருக்கிறது மற்றும் உபகரணங்கள் இல்லாமல் இருக்கின்றது அதை ஆய்வு செய்து அவ்வாறு உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை கண்டுபிடித்து உடனடியாக வாங்கிக் கொடுப்பதற்காக நாங்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.

தமிழ்நாட்டில் உள்ள 90 தொழிற்பயிற்சி நிலையமும் முழுமையாக பார்க்கப்படும், இது எட்டாவது தொழிற் பயிற்சி நிலையமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது மீதமுள்ள 82 தொழிற் பயிற்சி நிலையங்களையும் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு எந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டட வசதி, சுற்றுச்சுவர் வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் புதிய உபகரணங்கள் தேவை என மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய எந்தெந்த துறைகள் தேவை என தொழிற் பயிற்சி நிலையம் முதல்வர்களுடன் கலந்துரையாடி ஆலோசனை பெற்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று வரும் நிதியாண்டில் அமல்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.

இவ்வாய்வின் போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் மதிப்பிற்குரிய திரு. K.வீரராகராவ், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி இஆப., அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் திரு ப.ராஜா மற்றும் தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள்  உடன் இருந்தனர்.


No comments

Thank you for your comments