நீட் தேர்வு விலக்கு மசோதா- ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு
சென்னை:
சட்டசபையில் நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறினார்.
மருத்துவ படிப்பில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் ரத்து செய்யப்படும் என தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல் கட்ட நடவடிக்கையாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வின் பாதிப்பை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 13ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீட் தேர்வு விலக்கிற்கு ஆதரவு கோரி ஏற்கனவே 12 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதோடு நின்று விடாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக ஆட்சியில் அல்லாத 12 மாநிலங்களை நீட் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் வகையில் ஆதரவு திரட்டி வருகின்றார்.
இதேபோன்று, பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை சந்தித்து நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவுக் கோரி வருகின்றனர் தி.மு.க. எம்.பிக்கள்.
அந்த வகையில் இன்று (13/10/2021) தி.மு.க மாநில மகளிரணிச் செயலாளரும், தி.மு.கவின் நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து மொழி பெயர்க்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையையும் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தையும் வழங்கினார்.
இதேபோல, தி.மு.க. செய்தித் தொடர்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவனும், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியும் ஆந்திரா, கேரளா மாநிலங்களின் முதலமைச்சர்களையும், தெலங்கானா மாநில முதலமைச்சரின் மகனிடத்திலும் நேரில் சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திய தமிழக முதலமைச்சரின் கடிதத்தை அளித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையில் நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து விளக்கி கூறினார். மேலும், அந்த மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
No comments
Thank you for your comments