வேலுமணிக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டதா விஜிலென்ஸ் ரெய்டு? கிளம்பிய சந்தேகம்.... துறை ரீதியான விசாரணை!
சென்னை:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்த திட்டமிட்ட தகவல் முன்கூட்டியே வேலுமணி தரப்பினருக்கு கசியவிடப்பட்டதா? என்பது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்பி வேலுமணி தொடர்புடைய சுமார் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆகஸ்ட் 10ம் தேதி அன்று சோதனை நடத்தினர். கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கினர்.
மேலும் அவர்களுக்கு காலை, மதியம் என இரண்டு வேளை உணவும் இடையிடையே ரோஸ் மில்க், டீ உள்ளிட்டவற்றையும் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டது. எனவே இந்த ரெய்டு நடத்தப்போவதை முன்கூட்டியே தெரிந்துக் கொண்டு, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஆட்களை அழைத்து வந்ததுடன் அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோன்று, எப்போதும் வீட்டிலேயே தங்கும் எஸ்.பி.வேலுமணி, ஞாயிற்றுக்கிழமை இரவே பட்டினப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து புறப்பட்டு சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் வந்து தங்கியதும் ரெய்டு குறித்த தகவல் முன்கூட்டியே கசிந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அத்தோடு சோதனை நடக்கப் போவதை தெரிந்து கொண்டு, பணம் மற்றும் ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டுருக்கக் கூடும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதுவதாக சொல்லப்படுகிறது. எனவே, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தவிருக்கும் தகவல் முன்கூட்டியே வேலுமணி தரப்பினருக்கு கசியவிடப்பட்டதா என துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments
Thank you for your comments