Breaking News

நீட் பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை-...! பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி

நெல்லை, ஆக.2-

6 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 56 சதவீதம் அதிகரித்து உள்ளது.


முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா 3-வது அலை வருமா? வராதா? என்று தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.  பொதுமக்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து நடக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. மத்திய அரசு மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு வழங்கி உள்ளது.

விரைவில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தனர்.

அப்போது ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து காங்கிரஸ், தி.மு.க.வினர் பேசவில்லை. நீட் தேர்வில் மாணவர்கள் சாதிக்க தொடங்கி உள்ளனர். எனவே அவர்கள் வாழ்வில் மண்ணை வாரி தூற்ற வேண்டாம்.

பா.ஜ.க. ஆட்சிக்கு முன்னர் 2014-ம் ஆண்டு வரை 189 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 215 தனியார் மருத்துவக்கல்லூரிகளும் இருந்தது. தற்போது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 289 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 269 தனியார் மருத்துவக்கல்லூரிகளும் அதிகரித்துள்ளது. 6 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 56 சதவீதம் அதிகரித்து உள்ளது. 

நீட் குறித்து பேசுவதற்கு திமுகவினருக்கு அருகதை இல்லை. பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி மோடி அரசின் திட்டங்களை வீடு தோறும் சென்று கூறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments