அகரமுதலி இயக்ககத்தின் தூயதமிழ்ப் பற்றாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் கீழ் அகரமுதலி இயக்ககத்தின் தூயதமிழ்ப் பற்றாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என 10-8-2021 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:
அகரமுதலி இயக்ககத்தின் ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது!’
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!
கடைசி நாள்: ஆகத்து 31, 2021
நடைமுறை வாழ்க்கையிலும் தூயதமிழையே பயன்படுத்தும் தனித்தமிழ்ப் பற்றாளர்கள் மூவர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரூபா 5,000/- (உரூபா ஐந்தாயிரம் மட்டும்) பரிசுத் தொகை ‘தமிழ் அகராதியியல் நாள் விழாவில்’ 2019-2020ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்மொழிக் காப்பிற்கான ஆக்கத் திட்டம் என்பதால் தமிழறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, பரிசு பெறுவோரின் எண்ணிக்கையையும், பரிசுத் தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்னும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்களின் கோரிக்கையினை ஏற்று, ‘தூயதமிழ்ப் பற்றாளர்’ விருதினைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இயல்பாகவே தூயதமிழைப் பயன்படுத்துகிற தகுதி வாய்ந்தவர்களிலிருந்து மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தெரிவுசெய்து அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘தமிழ் அகராதியியல் நாள் விழா' விழாவின்போது, ஒவ்வொருவருக்கும் உரூபா 20,000/- (உரூபா இருபதாயிரம் மட்டும்) எனப் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளன.
விருதினைப் பெறுவதற்கு விருப்பமுள்ள, தகுதி வாய்ந்த தூயதமிழ்ப் பற்றாளர்கள் சொற்குவை.காம் (sorkuvai.com) என்ற வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிரப்பி, patralarvirudhu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ (அ) இயக்கக முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ 31.08.2021 மாலை 5.00 மணிக்குள் கிடைப்பது போல் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் விண்ணப்பிப்போர் தங்கள் பகுதியில் உள்ள அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோரில் யாரேனும் இருவரிடம் தங்களது தூயதமிழ்ப்பற்றை உறுதிசெய்யும் வகையில் நற்சான்றிதழ்களையும் பெற்று இணைத்து அனுப்ப வேண்டும். அத்துடன் நற்சான்று அளிப்போரின் ஒரு பக்க அளவிலான வாழ்க்கைக்குறிப்புகளையும்(Bio-data) சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும்.
இயக்கக முகவரி :
இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்,
நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75,
சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை - 600 028.
குறிப்பு : உரிய சான்றுகளுடன் முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
No comments
Thank you for your comments