Breaking News

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் அறிவிப்பு - 13.08.2021 முதல் 21.09.2021 வரை 29 நாட்கள் நடைபெறும்

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர்  ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ம் தேதி வரை நடைபெறும்  என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

முதலமைச்சர் வசமுள்ள காவல்துறை மீதான மானியக் கோரிக்கைகள் செப்டம்பர் 18 மற்றும் 20 தேதி ஆகிய இருநாட்கள் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் இதுகுறித்து பதில் அளித்து பேசுகிறார்  மொத்தத்தில் 29 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 

கூட்டத்தொடர் நடைபெறும் அலுவலக நாட்களில் காலை 10 மணிக்கு அவை தொடங்குகிறது

2021 – 2022ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய  சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்டு கட்சிகள், பா.ஜனதா உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அ.தி.மு.க. சார்பில் யாரும் வரவில்லை.

இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 

கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 13-ந்தேதி கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட் காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபையில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களின் இருக்கை முன்பு வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் திரைகளில் தெரியும்.

இது தவிர எம்.எல்.ஏ.க்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும். அதை புத்தகத்தை புரட்டுவது போல் பட்ஜெட் அறிக்கை பக்கங்களை பார்த்துக் கொள்ளலாம்.

மறுநாள் (14-ந்தேதி) வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இந்த இரண்டு பட்ஜெட்கள் மீதும் 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 4 நாட்கள் விவாதம் நடைபெறும். அதன் பிறகு 2 அமைச்சர்கள் பதில் அளித்து பேசுவார்கள்.

23-ந்தேதி முதல் மானிய கோரிக்கைகளை அந்தந்த துறை அமைச்சர்கள் தாக்கல் செய்வார்கள். 23 நாட்கள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.

அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். மொத்தம் 29 நாட்கள் சட்டசபை நடைபெறும்.

இவ்வாறு அப்பாவு கூறினார்.

அ.தி.மு.க. சார்பில் யாரும் வராதது ஏன்? என்ற கேள்விக்கு இன்று அவர்களுக்கு வசதி பட்டிருக்காது என்றார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் இன்று (10-8-2021) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அறிவிப்பில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு சட்மன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல்

ஆகஸ்ட் 13ம் தேதி - 2021 -2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை அளிக்கப்பெறுதல்

ஆகஸ்ட் 14ம் தேதி - 2021 -2022ம் ஆண்டுக்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை குறித்த நிதிநிலை அறிக்கை அளிக்கப்பெறுதல்

ஆகஸ்ட் 15ம் தேதி -  அரசு விடுமுறை

ஆகஸ்ட் 16ம் தேதி - இரகற் குறிப்புகள், இரங்கல் தீர்மானம்

ஆகஸட் 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 19ம் தேதி வரை 2021 -2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை குறித்த நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம் நடைபெறும்

ஆகஸ்ட் 20 முதல் 22ம் தேதி வரை அரசு விடுமுறை மற்றும் ஞாயிறு கிழமைகள்  

ஆகஸ்ட் 23ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெறும். அதன்  விவரம் வருமாறு:-

ஆகஸ்ட்  23ம் தேதி நீர்வளத்துறை, 

ஆகஸ்ட் 24ம் தேதி நகராட்சி நிர்வாகம், 

ஆகஸ்ட் 25ம் தேதி ஊரக வளர்ச்சித்துறை, 

ஆகஸ்ட் 26ம் தேதி கூட்டுறவு, 

ஆகஸ்ட்  27ம் தேதி கல்வித்துறை, 

ஆகஸ்ட்  28ம் தேதி நெடுஞ்சாலைத்துறை, 

ஆகஸ்ட்  29, 30ம் தேதி  விடுமுறை.

ஆகஸ்ட் 31ம் தேதி வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம்.

செப்டம்பர் 1ம் தேதி வருவாய் துறை, 

செப்டம்பர் 2ம் தேதி தொழில்துறை, தமிழ்வளர்ச்சித்துறை, 

செப்டம்பர் 3ம் தேதி வீட்டுவசதித்துறை, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை, 

செப்டம்பர் 4ம் தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, 

செப்டம்பர் 5ம் தேதி விடுமுறை.

செப்டம்பர் 6ம் தேதி மருத்துவம், 

செப்டம்பர் 7- ந்தேதி வனம், 

செப்டம்பர் 8ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை,

செப்டம்பர்  9ம் தேதி கைத்தறி, வணிகவரித்துறை, 

செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை. 

செப்டம்பர் 11, 12ம் தேதி  அரசு விடுமுறை.

செப்டம்பர் 13ம் தேதி எரிசக்தி துறை, மதுவிலக்கு, தொழிலாளர் நலத்துறை, 

செப்டம்பர் 14ம் தேதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, 

செப்டம்பர் 15ம் தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 

செப்டம்பர் 16ம் தேதி நீதி நிர்வாகம், சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், 

செப்டம்பர் 17ம் தேதி போக்குவரத்துத்துறை, 

செப்டம்பர் 18ம் தேதி காவல் மற்றும் தீயணைப்புத்துறை, 

செப்டம்பர் 19ம் தேதி அரசு விடுமுறை.

செப்டம்பர்  20ம் தேதி காவல் மற்றும் தீயணைப்புத்துறை, நிதித்துறை, மனிதவள மேலாண்மைத்துறை, 

செப்டம்பர் 21ம் தேதி பொதுத்துறை, மாநில சட்டமன்றம், அரசின் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தலும் நிறைவேற்றுதலும் நடைபெறும்.

இவ்வாறு, சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் கீழே தரப்பட்டுள்ளது.








No comments

Thank you for your comments