மத்திய அரசை பற்றி பொய் தகவல்களை காங்கிரஸ் பரப்புகிறது- பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டு
புதுடெல்லி, ஜூலை21-
கொரோனா 3-வது அலை வந்தால் அதை எதிர்கொள்ள அனைத்து எம்.பி.க்களும் தயாராக இருக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும்.
பாராளுமன்ற பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நேற்று காலை பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பாக நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு திறம்பட செய்து வருகிறது. தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செய்து வருகிறோம். எந்த இடத்திலும் தட்டுப்பாடு இல்லாமல் ஊசி போடப்பட்டு வருகிறது. ஆனால் காங்கிரசால் இதை ஜீரணிக்க முடியவில்லை.
மத்திய அரசை பற்றி பொய் தகவல்களை காங்கிரஸ் பரப்பி வருகிறது. அந்த கட்சி எல்லா இடத்திலும் வீழ்ந்து கொண்டு இருக்கிறது. அடுத்தடுத்த தேர்தலில் தோல்வியை சந்தித்து வருகிறார்கள்.
அசாம், மேற்கு வங்காளம், கேரளா என தோல்வியுற்ற போதிலும் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு அவர்கள் முயற்சி செய்யவில்லை. அவர்கள் எதிர்மறை எண்ணங்களை பரப்ப பார்க்கிறார்கள். காங்கிரசின் செயல்பாடுகள் துரதிருஷ்டவசமாக உள்ளது. அவர்களை விட நாம் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள். கொரோனா 3-வது அலை வந்தால் அதை எதிர்கொள்ள அனைத்து எம்.பி.க்களும் தயாராக இருக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

No comments
Thank you for your comments