பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் வாபஸ் – முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை
2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.7.2021) ஆணையிட்டுள்ளார்கள்.
2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவற்றுள்
‘தி இந்து’நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும்,
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்குகளும்,
‘எக்கனாமிக்ஸ் டைம்ஸ்’ நாளிதழின் ஆசிரியர் மீது 1 வழக்கும்,
‘தினமலர்’ நாளிதழின் ஆசிரியர் மீது 12 வழக்குகளும்,
‘ஆனந்த விகடன்’ வார இதழின் ஆசிரியர் மீது 9 வழக்குகளும்,
‘ஜுனியர் விகடன்’ இதழின் ஆசிரியர் மீது 11 வழக்குகளும்,
‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் மீது 23 வழக்குகளும்,
‘முரசொலி’ நாளிதழின் ஆசிரியர் மீது 17 வழக்குகளும்,
‘தினகரன்’ நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டிருந்தன,
மேலும், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, ‘நியூஸ் 7’ தொலைக்காட்சி, ‘சத்யம்’ தொலைக்காட்சி, ‘கேப்டன்’ தொலைக்காட்சி, ‘என்.டி.டி.வி’ தொலைக்காட்சி, ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘கலைஞர்’ தொலைக்காட்சி ஆகியவற்றின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.
திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில் “பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.7.2021) ஆணையிட்டுள்ளார்கள்.



No comments
Thank you for your comments