Breaking News

மகாராஷ்டிரா நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு...மீட்புப் பணியில் வீரர்கள்

மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.


மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் வியாழக்கிழமை மாலை பல மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மகாராஷ்டிராவின் கடலோர மாவட்டமான ராய்காட்டில் மகாத் தெஹ்சில் மற்றும் அதனை சுற்றி நிலச்சரிவு ஏற்பட்டது.  இதற்கிடையே கோலாப்பூர் மாவட்டத்தில் 47 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பலத்த மழை காரணமாக  சாலைகள் நீரில் மூழ்கின.

தொடர்ந்து மீட்பு பணிக்காக 2 கடற்படை மீட்புக் குழுக்கள் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹாத்துக்கும், 5 குழுக்கள் ரத்னகிரி மாவட்டத்தில் சிப்லூனுக்கும் சென்றுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எஃப்) மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உதவி வருகிறது.

ராய்காட் மாவட்டம் மகாத் தெஹ்சிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. 33 பேர் இறந்த உடல்கள் மீட்கப்பட்டன, 52 பேர் இன்னும் காணவில்லை. காலையில் மீட்பு நடவடிக்கை மீண்டும் தொடங்கும். மொத்தம் 32 வீடுகள் முழுமையாக அழிந்துள்ளன.  அருகில் உள்ள பகுதியில் மூன்று வெவ்வேறு நிலச்சரிவு சம்பவங்கள் நடந்தன.  

இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஏற்பட்ட இரு வேறு நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. 25 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.  இரவு வேளை என்பதனால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மும்பை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


முன்னதாக, மகாராஷ்டிரா  பலத்த மழை பெய்த நிலையில் சதாரா மாவட்டத்தின் படானில் உள்ள மிர்கான் கிராமத்தைச் சேர்ந்த 221 பேரை தேசிய பேரழிவு மீட்புப் படை  குழு (National Disaster Response Force -NDRF) மீட்டுள்ளது.



No comments

Thank you for your comments