அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருவனந்தபுரம்:
திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இருப்பினும் மாணவர்கள் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் கேரளாவில் இன்னும் பாதிப்பு குறையவில்லை. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த மாணவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதில் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் 50 பேரும் முதுகலை வகுப்பில் படிக்கும் 10 மாணவர்களும் அடங்குவர். முதுகலை மாணவர்கள் 10 பேரும் மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் பயிற்சி மருத்துவர்களாக உள்ளனர். இதில் 39 மருத்துவ மாணவர்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது மருத்துவ நிபுணர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதித்த 60 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து எம்.பி.பி.எஸ்.மற்றும் முதுகலை மருத்துவ வகுப்புகளை ரத்து செய்து திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளை மூடுவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

No comments
Thank you for your comments