Breaking News

பெரிய திட்டத்தை கையிலெடுக்க தயாராகும் தமிழ்நாடு அரசு.. ! -

சென்னை: 

தமிழ்நாட்டில் கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கும் முடிவை அரசு எடுத்து இருக்கும் நிலையில்.. இன்னொரு முக்கியமான தொல்லியல் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் முடிவையும் அரசு எடுத்து உள்ளது.


மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 -2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது.  கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு.


இந்நிலையில் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை எம்பி சு. வெங்கடேசன் இந்த ஆய்வில் உடன் இருந்தார். இங்கு அருங்காட்சியகம் அமைப்பும் பணிகளையும், அதன் கட்டுமானங்களையும் இவர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் இங்கு உலகத்தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும். சர்வதேச தரத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் கீழடி போலவே தமிழ்நாடு முழுக்க பல்வேறு கடல் பகுதிகளில் பல்வேறு வரலாற்று எச்சங்கள் ஆராய்ச்சி செய்யப்படாமல் உள்ளன.

கீழடி என்று ஒரு இடத்திலேயே 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று பொருட்கள் கிடைக்கும் போது, கடலுக்கு உள்ளே இதை விட பழமையான வரலாற்று சான்றுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகிறார்கள். 


இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு விரைவில் கடல்சார் தொல்லியல் ஆராய்ச்சியை கையில் எடுக்க உள்ளது. தமிழர்களின் தொல்லியல் வரலாற்றுக்கு கீழடி ஒரு சான்று. ஆனால் இது மிகப்பெரிய சோற்று பானையின் சின்ன பருக்கைதான். இன்னும் பல வரலாற்று பின்னணிகளை பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்பதால் கடல்சார் தொல்லியல் ஆராய்ச்சியை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ளது. 

ஆனால் இந்த ஆராய்ச்சி அவ்வளவு எளிதானது கிடையாது. இது மிகவும் சவாலான காரியம். வங்க கடல் பகுதிகளில் தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாடு மக்கள் 2600 வருடங்களுக்கு முன்பு மேற்கொண்ட கடல் சார் வர்த்தகம், கடல் சார் பயணங்கள் குறித்த உண்மைகள், வரலாற்று கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படும். இதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன. 


ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சி கடற்கரைக்கு அருகே நடத்தப்பட்டு வருகிறது. கடல் கரையில், சிறிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. இதேபோல் மற்ற வங்க கடல் பகுதியிலும் விரைவில் ஆராய்ச்சியை தொடங்க உள்ளனர்.

தமிழ்நாட்டில் தொல்லியல் ஆராய்ச்சியில் இது மிகப்பெரிய ஆபரேஷனாக இருக்கும். இதற்கான ஆலோசனைகள் மட்டுமே தற்போது நடத்து வருகின்றன. விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, வங்காள கரையோரம் பல்வேறு கரைகளில், கடலுக்கு உள்ளேயும் ஆராய்ச்சிகள் தொடங்கப்படும் என்கிறார்கள்.

No comments

Thank you for your comments