ஜூலை 1-ந் தேதி முதல் ஆம்னி பஸ் சேவை தொடக்கம் - உரிமையாளர் சங்கம் அறிவிப்பு
சென்னை:
கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று முதல் 27 மாவட்டங்களில் அரசு பஸ் சேவை தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று முதல் 27 மாவட்டங்களில் அரசு பஸ் சேவை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் தனியார் மற்றும் ஆம்னி பஸ் போக்குவரத்து தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆம்னி பஸ் சேவை ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரம் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கு விதிக்கப்பட்டதால், ஆம்னி பஸ் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று ஒருசில தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. பெரும்பாலான பஸ்கள் 1ம் தேதி முதல் இயக்க திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது, பொதுமுடக்கம் காரணமாக ஆம்னி பஸ் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பியுள்ள தொழிலாளர் குடும்பம் வருவாய் இழந்துள்ளனர்.
எங்களது பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு ஏப்ரல், மே, ஜூன் காலாண்டு வரி விலக்கு பெரும் வகையில் பஸ்களை இயக்கப்போவதில்லை என்று ஏற்கனவே போக்குவரத்து துறைக்கு தெரிவித்துள்ளோம். ஜூன் மாதம் முழுவதும் பேருந்துகளை இயக்காமல் இருந்தால்தான் வரிவிலக்கை பெற முடியும். எனவே ஆம்னி பஸ்களை தற்போது இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஒருசில பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும். அனைத்து பஸ்களும் ஜூலை 1-ந் தேதி முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் தங்கராஜ் கூறுகையில், பேருந்துகளுக்கு விதிக்கப்படும் வரி சலுகை பெறுவதற்காக தொடர்ச்சியாக 3 மாதங்கள் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒருசிலர் இன்று பஸ்களை இயக்குகிறார்கள். பெரும்பாலான தனியார் பஸ்கள் 1-ந் தேதி முதல் இயங்கும் என்றார்.


No comments
Thank you for your comments