Breaking News

தேசிய அளவில் விருது.. பெண் தலைமை காவலரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ். என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனவர்கள், திருடு போன வாகனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு இந்த இணையதள வசதி ஏதுவாக உள்ளது.


மேற்படி இந்த இணையதள பயன்பாடு குறித்து டெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau) தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மேற்படி சி.சி.டி.என்.எஸ். இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்தி குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தல், திருட்டு வாகனங்களை கண்டுபிடித்தல், காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு காவல்துறையில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 3 பேர்களில் ஒருவராக கன்னியாகுமரி மாவட்டம்  மண்டைக்காடு காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் தலைமை காவலர் திருமதி. மேபின் சிமிலா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு "Good practices in CCTNS/ICJS” என்ற விருது வழங்கப்பட்டது. 

அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரி நாராயணன் IPS அவர்கள் வழங்கி விருது வாங்கிய பெண் தலைமை காவலர் திருமதி. மேபின் சிமிலா அவர்களை வெகுவாக பாராட்டினார். மேலும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற ஊக்கப்படுத்தினார். 

இவர் இதுவரை 41 அடையாளம் தெரியாமல் இறந்த நபர்களை சி.சி.டி.என்.எஸ். இணையதளம் மூலம் அடையாளம் கண்டுபிடித்து சம்மந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உதவியும், காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments