சத்தியமங்கலம் காட்டில் கொட்டிகிடக்கும் புதையல் - வீரப்பன் மகள் அறிவிப்பால் பரபரப்பு...
சென்னை:
சந்தன மரக் கடத்தல் மன்னன் வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் புதையல், இன்னமும் கட்டுகட்டாக இருக்கிறது என்று அவரது மகள் விஜயலட்சுமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1990களில் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையோர வனப்பகுதிகளில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வீரப்பன். இரு மாநிலங்களை சேர்ந்த அதிரடி படைகளும் பல ஆண்டுகளாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் கண்களில் சிக்காமல் தப்பித்து வந்தார்.
சத்தியமங்கலம் வனப்பகுதி மொத்தமும் வீரப்பனுக்கு அத்துப்படி . அங்கு அவருக்கு பல்வேறு உளவாளிகள் இருந்தனர். யானை தந்தம் கடத்துவது, சந்தன மரங்களை வெட்டி கடத்துவது போன்றவற்றின் மூலமாக பல கோடி ரூபாய்களை அவர் சம்பாதித்தார் என்பதெல்லாம் வீரப்பன் மீதான குற்றச்சாட்டுகளாக இருந்தன.
இந்த நிலையில்தான் 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி தமிழக அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வீரப்பன் மரணமடைந்தார். அவர் எப்படி கண்டுபிடிக்கப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டார் என்பதில் ஒரு பக்கம் மர்ம முடிச்சுகள் கிளப்பபட்டாலும், அவர் வைத்திருந்த பணம் என்ன ஆனது என்பது பற்றி இன்னொரு மர்மம் சுற்றி வருகிறது.
சந்தன மரக் கடத்தல் மற்றும் யானைத் தந்தம் கடத்தல் போன்றவற்றின் மூலமாக சம்பாதித்த பணம், பல கோடி ரூபாய் எங்கே போயிருக்கும் , அது சத்தியமங்கலம் வனப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டு இருக்குமா என்பது பற்றி பல்வேறு யூகங்கள் வெகு நாட்களாக வலம் வந்தபடி இருக்கின்றன. இப்போது அது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி.
மாவீரன் பிள்ளை, என்ற திரைப்படத்தில் விஜயலட்சுமி முதல்முறையாக அரிதாரம் பூசி உள்ளார். இந்த மாதம் இறுதியில் அந்த திரைப்படம் வெளியாக உள்ளது. கேஎஸ்ஆர் ராஜா என்பவர் தயாரித்து இயக்கியுள்ளார். திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது விஜயலட்சுமி வீரப்பன் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புதையல் இருப்பது உண்மைதான் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
வீரப்பன்-முத்துலட்சுமி தம்பதிக்கு, வித்யாராணி மற்றும் விஜயலட்சுமி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், வித்யாராணி பாஜகவில் இணைந்துள்ளார். விஜயலட்சுமி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்துள்ளார். இதில் அரசியல் தவிர்த்து நடிகையாகவும் களமிறங்கியுள்ளார் விஜயலட்சுமி. இந்த திரைப்படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருப்பதாக தனது பேட்டியின்போது அவர் குறிப்பிட்டார்.

No comments
Thank you for your comments