கொரோனா 2-வது அலை கட்டுப்பாட்டை மீறி விட்டது.... உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
சென்னை :
கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவிவருகிறது. இது கடந்த ஆண்டைவிட மோசமாக உள்ளது என்று அட்வகேட் ஜெனரல் கூறினார்.
ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஒரு வழக்குக்காக ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதிகள் தமிழகத்தில், கொரோனா பரவல் குறித்து சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அட்வகேட் ஜெனரல், கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவிவருகிறது. இது கடந்த ஆண்டைவிட மோசமாக உள்ளது என்று கூறினார். உடனே நீதிபதிகள், கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் எதுவும் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அட்வகேட் ஜெனரல், கொரோனாவின் 2-வது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. நீதிமன்றத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க சுகாதாரத் துறை செயலாளர்தான் சரியான நபர் என்பதால், அவரை நீதிமன்றம் வரச்சொல்கிறேன் என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று மதியமே அவரை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர்.


No comments
Thank you for your comments