அரசியலை விட்டே ஒதுங்குகிறேன்... பெண் எம்.எல்.ஏ., உருக்கம்...!
பண்ருட்டி :
பண்ருட்டி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அரசியலை விட்டே ஒதுங்கபோவதாக உருக்கமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ சத்தியா பன்னீர் செல்வம்.
பண்ருட்டியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என்று அந்த தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சத்யா பன்னீர் செல்வம் நம்பி இருந்தார்.. ஆனால் பண்ருட்டி தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக சொரத்தூர் ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டதால் சத்யா பன்னீர் செல்வமும் அவரது கணவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கள் ஆதங்கத்தை உருக்கமான விளம்பரமாக்கி நாளிதழ்களில் வெளியிட்ட இருவரும் தங்கள் அரசியலில் இருந்து விலகி இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் சத்யா பன்னீர் செல்வத்தின் வீட்டை முற்றுகையிட்டு அரசியலில் இருந்து விலகக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமாக போட்டியிட வாய்ப்பு கிடைக்காத எம்.எல்.ஏக்கள் சுயேட்சையாக களம் இறங்குவது வழக்கம், ஆனால் இவர்களது இந்த அறிவிப்பு கட்சியினரிடையே அனுதாபத்தை பெற்றுதந்திருக்கின்றது. விளம்பரம் வெளியிட்டு அரசியலை விட்டு தம்பதி சகிதமாக விலகுவதாக அரசியல் ஸ்டண்ட் அடிக்கின்றனர் என்று சிலர் விமர்சித்து வருகின்றனர்.
பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக வாழ்வுரிமைகட்சி தலைவர் வேல்முருகன் களமிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
No comments
Thank you for your comments