Breaking News

என்னைக் கொலை செய்ய சதி..மம்தா பகிரங்க குற்றச்சாட்டு

கொல்கத்தா, மார்ச் 17-

டெல்லி எல்லையில் ஆறு மாதமாக போராடி வரும் விவசாயிகளை சந்திக்காமல், அனைத்து அமைச்சர்களும் மேற்கு வங்காளத்தில் ஓட்டல்களை பதிவு செய்து தங்கியுள்ளனர் என்று மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.



மேற்கு வங்காளம் தேர்தல் பா.ஜனதா- மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றிற்கு இடையிலான போட்டி என்பதைவிட பனிப்போர் என்றே கூறலாம். இரண்டு கட்சிகளும் கடும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வதைவிட, கட்சி தலைவர்கள் மாறிமாறி பரஸ்பர குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகின்றனர்.

நந்திகிராம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி தாக்கப்பட்டார். பா.ஜனதா கட்சியினரை சேர்ந்தவர்கள்தான் தாக்கினார்கள் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். மம்தா நாடகம் ஆடுகிறார் என பா.ஜனதா பதில்அளித்தது.

இந்த நிலையில் பங்குராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி ‘‘தற்போது வரை விவசாயிகள் கடந்த ஆறு மாதமாக டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர். அமைச்சர்கள் யாரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அனைத்து அமைச்சர்களும் மேற்கு வங்காளத்தில் உள்ளனர். அவர்கள் இங்கு ஓட்டல்களை பதிவு செய்து, என்னைக் கொலை செய்வதற்கும், திரிணாமுல் காங்கிரசை அழிப்பதற்கும், தேர்தல் கமிஷன் உதவியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எப்படி வழக்கு பதிவு செய்யலாம் என சதி செய்து கொண்டிருக்கிறார்கள்’’ எனக் குற்றம்சாட்டினார்.

No comments

Thank you for your comments