Breaking News

ஸ்டாலினின் ஒற்றை வாக்குறுதி...! உறுதியாக நின்ற கூட்டணியினர்..!

சென்னை, மார்ச் 9:

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு கேட்ட எண்ணிக்கையிலான தொகுதிகள் கிடைக்காததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி தற்போது அனைவரும் ஒப்புக் கொண்டது ஸ்டாலினின் ஒற்றை வாக்குறுதியே..



 திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கருணாஸ் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த தேர்தலை போல் தாராளம் காட்டாமல் இந்த முறை குறைத்துக் கொண்டு அதே சமயம் கூட்டணி கட்சியினரை மனம் கோணாமல் திமுக தலைவர் சாதூர்யமாக கையாண்டுள்ளார்...

திமுக கூட்டணியில் 2004 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து வருகிறது. அது போல் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை அதிமுக கூட்டணியிலும் மக்கள் நலக் கூட்டணி என மாறி மாறி அங்கம் வகித்து அண்மைக்காலமாக திமுகவில் கூட்டணி வைத்துள்ளன. நீண்ட காலமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி தங்கள் இருப்பை கருத்தில் கொண்டு கேட்ட இடம் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை.  அதே வேளை கவுரவம் குறையாமல் சீட்டுகளை பெற வேண்டும் என ராகுல் காந்தி அறிவுறுத்தியிருந்தார். 

இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நேரடி அழைப்புகளும் வந்தன. ஆனால் அவற்றை எல்லாம் புறக்கணித்துவிட்டு பாஜகவுக்கு கொடுத்த இடங்களை விட கூடுதலாக இடங்களை காங்கிரஸ் திமுக கூட்டணியில் பெற்றுவிட்டது.  அது போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி 9 இடங்களை கேட்டு 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனினும் 6 இடங்களுக்கு ஒப்புக் கொண்டனர். அது போல் மதிமுகவும் நிறைய இடங்களை கேட்டு தனி சின்னத்தில் போட்டி என அறிவித்தது.ஆனால் திமுக கூட்டணியில் கொடுத்த 6 இடங்களை பெற்றுக் கொண்ட மதிமுக, உதயச்சூரியன் சின்னத்தில் போட்டியிடவும் ஒப்புக் கொண்டது. 

இத்தனை இழுபறிகள் நீடித்த நிலையில் கூட்டணிக் கட்சியினர் சிதறாமல் பார்த்துக் கொண்டதில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அவர்தான் கூட்டணி கட்சித் தலைவர்களை மிகவும் சரியாக அணுகி, நியாயமான காரணங்களை எடுத்துரைத்தார்.

அதாவது, தமிழக சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 118 ஆகும். திமுக மட்டுமே 170 முதல் 180 இடங்களில் போட்டியிட்டு அதிக அளவில் மெஜாரிட்டியை பெற வேண்டும். கடந்த 2006ஆம் ஆண்டு மைனாரிட்டி திமுக அரசு என்றே ஜெயலலிதா அழைத்தார். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஸ்டாலின் அதிக இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவில்லை.

மேலும் “உங்களுக்கு உள்ளாட்சி தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தாராளம் காட்டப்படும். அது போல் கூட்டணி கட்சியினரின் கோரிக்கையை ஏற்று சட்டமேலவை உருவாக்கப்படும். அதிலும் உங்களுக்கு தாராளம் காட்டுகிறோம். தனி பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்து மக்கள் நல திட்டங்களை செய்து அடுத்த தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அப்போது கூட்டணி கட்சிகளுக்கு எதிர்பார்த்தது கிடைக்கும். குறைவான இடங்களை கொடுத்து நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் போங்கள் என நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் அனைவரும் எங்களுக்கு வேண்டும்“ என ஸ்டாலின் உருக்கமாக கூறியதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் கூட்டணி கட்சிகளும் பிற கட்சிகளின் அழைப்பை ஏற்காமல் திமுக கூட்டணியில் நிலைத்திருக்க காரணமாக அமைந்துவிட்டது.

திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 57  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்,  விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள், மதிமுக 6 தொகுதிகள், காங்கிரஸ் கட்சியுடன் 25 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஎம்) 6 தொகுதிகள், வாழ்வுரிமைக் கட்சி 1தொகுதி,  ஆதித்தமிழர் பேரவைக்கு 1 தொகுதி, மக்கள் விடுதலைக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

No comments

Thank you for your comments