Breaking News

மோடி, ஆர்எஸ்எஸ்... தமிழ் கலாச்சாரத்தை அவமதிக்க முயற்சி...!

கன்னியாகுமரி, மார்ச் 1: 

பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அவமதிப்பதை நாம் அனுமதிக்கக்கூடாது என ராகுல் காந்தி பேசினார்.



காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி, தமிழகத்தில் மூன்றாவது கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் செய்த அவர், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

பிரசாரத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது,  மத்திய அரசு தமிழ் கலாச்சாரத்தை மதிக்கவில்லை. அவர்கள் சொல்வதை எல்லாம் செய்யும் ஒரு முதல்வர் இருக்கிறார். அவர் இந்த மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடந்துகொள்ளவில்லை. மோடி என்ன செய்ய விரும்புகிறாரோ அதை செயல்படுத்துகிறார். மோடிக்கு முன் தலைவணங்கிய ஒருவர், தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஆர்.எஸ்.எஸ் தமிழ் கலாச்சாரத்தை அவமதிப்பதை முதல்வர் அனுமதிக்கக்கூடாது. 

ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே வரலாறு என்கிறார் மோடி. தமிழ் ஒரு இந்திய மொழி இல்லையா? தமிழர் வரலாறு இந்தியர் வரலாறு இல்லையா? அல்லது தமிழ் கலாச்சாரம் இந்திய கலாச்சாரம் இல்லையா? ஒரு இந்தியனாக, தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது எனது கடமை.  நம் நாடு வெவ்வேறு மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், வரலாறுகள் கொண்ட நாடு ஆகும். அதையெல்லாம் நாங்கள் மதிக்கிறோம். தமிழ் கலாச்சாரம், மொழி மற்றும் தமிழ் வரலாற்றை இழிவுபடுத்துவதற்கும் நசுக்குவதற்கும் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் மேற்கொள்ளும் முயற்சியை நாங்கள் ஏற்கமாட்டோம். மோடியும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அவமதிப்பதை நாம் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.




மறைந்த கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல் காந்தி இன்று மரியாதை செலுத்தினார்.  வசந்தகுமாருக்காக கட்டப்பட உள்ள மணி மண்டபத்திற்கும் அடிக்கல் நாட்டினார். 

வசந்தகுமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.


கார்மல் மாதா உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியருடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார்.


No comments

Thank you for your comments