Breaking News

கங்குலி ஆட்டத்தை தேர்தலுடன் ஒப்பிட்டு பேசிய ராஜ்நாத் சிங்

மிட்னாப்பூர்:

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என பா.ஜனதா தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேற்கு வங்காளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மம்தா ஆட்சியை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதா தேர்தலில் குதித்துள்ளது. அம்மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை பா.ஜனதா இழுத்துள்ளது. பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய பலமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்துள்ள சுவெந்து அதிகாரி திகழ்கிறார். இவர் மம்தாவுடன் நந்திகிராமில் பலப்பரீட்சை நடத்துகிறார். பிரதமர் மோடி, பா.ஜனதா தேசியத் தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் மேற்கு மிட்னாப்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது ‘‘கங்குலி எப்போதெல்லாம் க்ரீஸை தாண்டி முன்னால் வருகிறாரோ, அப்போதெல்லாம் அவர் உறுதியாக சிக்சர் விளாசுவார். மக்களவை தேர்தல் ஆதரவு போன்று நீங்கள் ஆதரவு தந்தால், நாங்கள் நிச்சயமாக எல்லையை தாண்டி (க்ரீஸ்), உறுதியாக சட்டசபை தேர்தலில் சிக்சர் விளாசுவோம். இங்கு பா.ஜனதா ஆட்சி அமையும்’’ என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலி பா.ஜனதாவில் இணைய இருக்கிறார் என்ற செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தகுந்தது.


நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
ஸ்வப்பன் தாஸ் குப்தா ராஜிநாமா!

புதுடெல்லி:

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வப்பன் தாஸ் குப்தா செவ்வாய்க்கிழமை தன் எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

கடந்த 2016ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக ஸ்வப்பன் தாஸ் குப்தா தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவி காலம் 2022ம் ஆண்டு முடிவடைகிறது.

இந்நிலையில் மேற்குவங்காள சட்டமன்ற தேர்தலில் தாரகேஷ்வர் தொகுதியின் பாஜக வேட்பாளராக ஸ்வப்பன் தாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதுவரை அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. இதற்கிடையில் அரசியலமைப்பின் 10 வது அட்டவணையின் பிரிவின் கீழ் எம்.பி பதவியில் இருக்கும் ஸ்வப்பன் தாஸ் அரசியல் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அவரை பதவி நீக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹவ் மோய்த்ரா வலியுறுத்தினார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஸ்வப்பன் தாஸ் குப்தா மீது அழுத்தம் அதிகரித்தது. இந்நிலையில் ஸ்வப்பன் தாஸ் குப்தா நேற்று தன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். "ஒரு சிறந்த வங்காளத்துக்கான போராட்டத்தில் என்னை முழுமையாக ஈடுபடுத்துவதற்காக நான் மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்துள்ளேன். அடுத்த சில நாட்களில் தாரகேஷ்வர் சட்டமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்வேன் என்று நம்புகிறேன் ” என்று ஸ்வப்பன் தாஸ் குப்தா கூறினார்.

No comments

Thank you for your comments