Breaking News

மகளிர் தின பேரணியில் வெடித்தது வன்முறை - 80 பெண்கள் படுகாயம்

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



உலகம் முழுவதும் மார்ச் 8ம் தேதி  சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.  இதையொட்டி மெக்சிகோவில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மெக்சிகோ சிட்டியின் மையப்பகுதியில் திரண்ட பெண்கள் அதிபர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர்.

இதற்கிடையில் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்திடாத வண்ணம் அதிபர் மாளிகையின் முன்பு போலீசார் இரும்பு சுவரை அமைத்தனர். மேலும் அதிபர் மாளிகையை சுற்றிலும் பெண் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அதிபர் மாளிகையை நெருங்கிய போராட்டக்காரர்கள் சுத்தியல், மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றால் இரும்பு சுவரை தகர்த்து கீழே தள்ள முயற்சித்தனர்.‌

பெண் போலீசார் அவர்களை தடுக்க முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சற்று நேரத்தில் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.‌ போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி எறிந்தனர். அதேபோல் போராட்டக்காரர்கள் கையில் கிடைத்த பொருட்களை போலீசார் மீது வீசி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.‌  இந்த மோதலில் பெண் போலீஸ் அதிகாரிகள் 62 பேரும், போராட்டக்காரர்கள் தரப்பில் 19 பெண்களும் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments

Thank you for your comments