திமுக தேர்தல் அறிக்கையில் புதிதாக 5 வாக்குறுதிகள் சேர்ப்பு
சென்னை :
திமுக தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் மேலும் புதிதாக 5 வாக்குறுதிகள் சேர்க்கப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. 234 சட்டமன்றத் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் போக மீதமுள்ள 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மார்ச் 12ம் தேதி வெளியிட்டார். தேர்தல் கதாநாயகனாக விளங்கும் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 13ம் தேதி வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட நிலையில் மேலும் புதிதாக 5 வாக்குறுதிகள் சேர்க்கப்படுவதாக மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
புதிய 5 வாக்குறுதிகள் விவரம்:
* இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ஐ திரும்ப பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
* சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது
* சென்னை - காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது
* குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
* மத்திய அரசு வெளியிட்டு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020 நிராகரிக்கப்படும்
என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments