Breaking News

தினகரனுக்கு கமல் பகிரங்க அழைப்பு… அனல் பறக்கும் தமிழக அரசியல் களம்!!

சென்னை: 

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக வலுவான மெகா கூட்டணியை அமைக்க முயலும் டி.டி. வி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு கமல்ஹாசன் வெளிப்படையாக தன்னுடன் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளது. 



 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் பரப்பரப்பைப் பற்ற வைத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பெற்ற 3.72 சதவீதம் வாக்குகளும், அமமுக வாங்கிய 5.25 சதவீத வாக்குகளும் சேர்ந்தால் வலுவான மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. ஏற்கனவே, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை சந்தித்துள்ள சூழலில், அவரும் மூன்றாவது அணியில் சேர்ந்தால் என்னவாகும் என்று அரசியல் பார்வையாளர்கள் புதிய கணக்குகளை போடச் தொடங்கியுள்ளனர்.

இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் என்னவாகும் என்று கணிக்கும் முன்பாக இந்தக் கட்சிகள் கைகோர்க்க வாய்ப்பு இருக்கிறதா என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது. அதிமுக, திமுக அணியில் இணையாத எல்லாக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து இரு கழகங்களுக்கு மாற்றாக ஒரு மெகா கூட்டணியை உருவாக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் முயற்சி எடுத்து வருகிறார். கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள நிலையில், தன்னையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்கப் போவதாக தினகரனும் அறிவித்துள்ளார். கடந்த பல தேர்தல்களாக சீமானின் நாம் தமழர் கட்சி தனித்தே போட்டியிட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 3.88 சதவீத ஓட்டுக்களை நாம் தமிழர் பெற்றது. இது கமல் ஹாசனின் மய்யத்தை விட அதிகமாகும்.வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே சீமான் அறிவித்துவிட்டார். பல தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அவர் அறிவித்துள்ளார். 

ஆனால், அவர் சசிகலாவை திடீரென்று சந்தித்தது அனைவரின் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் சீமான் கை கோர்ப்பாரா என்ற கேள்விகள் அலையடிக்கின்றன.தொடர்ந்து தனித்துப் போட்டியிடும் சீமான் கூட்டணி அரசியலுக்கு சம்மதிப்பாரா என்பது மெகா கூட்டணி அமைவதற்கு முதல் கேள்வியாக உருவெடுத்துள்ளது.


அடுத்த முக்கிய கேள்வி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள தினகரன், கமல்ஹாசனுடன் கைகோர்க்க முன்வருவாரா என்பது. கமல்ஹாசனும் தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்கனவே அறிவித்துவிட்டார். 

ஒரு கூட்டணிக்கு இரு முதல் அமைச்சர்கள் இருக்க முடியாது என்பதால், இருவரில் விட்டுக்கொடுத்தால்தான் கூட்டணி அமையும். மய்யத்தைவிட தினகரன் கட்சி அதிக ஓட்டுக்களைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுள்ளது. தற்போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ‘பிரஷர் குக்கர்’ சின்னத்தையும் முன்பே பெற்றுள்ளது. 

சென்ற தேர்தலில் கடைசி கட்டத்தில் தேர்தலுக்கு சில நாட்கள் முன்புதான் தினகரன் பரிசுப் பொட்டி சின்னத்தை வாங்கினார். இப்போது, சசிகலாவும் விடுதலையாகி களத்தில் இருக்கும் சூழலில் மய்யத்துக்கு இரண்டாவது இடத்தில் இருக்க தினகரன் சம்மதிப்பாரா என்ற முக்கிய தடையைத் தாண்டினால்தான் மய்யத்துடன் தினகரன் சேர்வாரா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். ஏற்கனவே, கமல்ஹாசன் அவரது நண்பரும், நடிகருமான ரஜினிகாந்திடம் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார். வரும் 2021 தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ஏற்கனவே கூறிவிட்ட ரஜினி, கமலுக்காக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மக்கள் நீதி மய்யத்தை ஆதரிப்பாரா என்ற கேள்வியும் இருக்கிறது.

கமல்ஹாசனின் புதிய கட்சி, சென்னையிலும் கோவை, மதுரை ஆகிய இடங்களில் நகரப்பகுதிகளில் ஓரளவு ஆதரவைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தல் முதல் தேர்தல் என்பதால் வாக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றும், வரும் தேர்தலில் கட்சி பரவலாக அறிமுகமாகியுள்ளதால் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்றும் கமல் ரசிகர்கள் நினைக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரதமரை முன்னிறுத்தி நடத்தப்பட்ட தேர்தல் என்பதை சுட்டிக்காட்டும் அவர்கள், சட்டமன்றத் தேர்தலில் கமலை முதல்வர் வேட்பாளராக அறிவித்து ஓட்டு கேட்கும்போது, அதிக வாக்குகளைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

சென்னையிலும் மதுரை, கோவையின் நகர பகுதிகளிலும் கமலுக்கு ஏற்கனவே 10 முதல் 15 சதவீத வாக்குகள் இருப்பதால் இந்தப் பகுதிகளிலும் 20 சதவீத வாக்குகளை எட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வளவு அதிக வாக்குகளை பெற்றால் அந்த அணி அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் வெற்றி தோல்வியைப் பெருமளவு பாதிக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. மேலும், சில தொகுதிகளை பிடிக்கவும் இந்த அணியால் முடியும் என்ற நிலை ஏற்படும். 

மேலும், ஒரு மெகா அணி அமையும்போது அதற்கு மக்கள் ஆதரவு கூடவும், திமுகவுடன் கூட்டணியில் தொகுதி பிரச்சினையை சந்திக்கும் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளில், ஏதாவது இந்த அணியுடன் சேரலாம் என்ற எதிர்பார்ப்பில் கமலின் தொண்டர்கள் இருக்கிறார்கள். இப்படி ஒரு மெகா கூட்டணி ரஜினி ஆதரவுடன் உருவானால் தமிழக அரசியல் களத்தில் இதுவரை இல்லாத மாற்றம் ஏற்படும் என்று அவர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். ஆனால், கட்சிக் கட்டமைப்பு இல்லாத நிலையில் வாக்குகளை மட்டும் அவர்கள் பிரித்து தொகுதிகளை வெல்லாத நிலையும் உருவாகலாம் என்று கணிக்கப்படுகிறது.

No comments

Thank you for your comments