Breaking News

புவி நேரத்தால் ஒரு மணிநேரம் இருளில் மூழ்கிய உலகம்!

நியூயார்க், மார்ச் 20-

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 19-ம் தேதி புவி மணி (Earth Hour) அணுசரிக்கப்படுகிறது. வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும்.

ஆஸ்திரேலியாவின் உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்ட முதலாவது புவி மணி நிகழ்வு 2007 மார்ச் 31 ஆம் தேதி இரவு 7:30 - 8:30 மணிக்கு இடையில், சிட்னியில் நடைபெற்றது. 2.2 மில்லியன் மக்கள் பங்கேற்ற இந்த முதல் நிகழ்வின்போது ஆஸ்திரேலியாவின் மின் நுகர்வு 2.1% - 10.2% அளவுக்கு குறைந்ததாகக் கருதப்படுகிறது.

அன்றிலிருந்து ஆண்டுதோறும் மார்ச் மாதம் 19-ம் தேதி இரவு 7:30 - 8:30 மணிக்கு இடையில் உலகில் உள்ள 178 நாடுகள் புவி மணி நேரத்தை கடைபிடித்து வருகின்றன.

அவ்வகையில், ஆசிய கண்டத்தில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நேற்றிரவு அணுசரிக்கப்பட்ட புவி நேரம், உள்ளூர் நேரமாற்றத்தின் அடிப்படையில் அடுத்தடுத்து, சிங்கப்பூர், ஹாங்காங், ஐரோப்பா, சிட்னி, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, பாரிஸ், அமெரிக்கா என உலகம் முழுவதும் உள்ள ஏழாயிரத்துக்கும் அதிகமான பெருநகரங்களில் கடைபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவின் பிரபல எம்பயர் ஸ்டேட் கட்டிடம், பாரிஸ் நகரின் ஈபிள் கோபுரம், லண்டன் பாராளுமன்றம், சிட்னி நகரின் துறைமுகப் பாலம் உள்ளிட்ட உலகின் பல்வேறு கலைநயம் மிக்க நினைவுச் சின்னங்கள் நேற்று ஒருமணி நேரம் இருளில் மூழ்கின.

No comments

Thank you for your comments