கருணாநிதி, ஸ்டாலின், உதயசூரியன் படத்துடன் ஓட்டுக்கு கொலுசு... சேலத்தில் பறிமுதல்
சேலம், மார்ச் 17-
ஓட்டுக்கு பேப்பருக்குள் வைத்து பணம் விநியோகம், பால் கவருக்குள் பணம் போடுவது என்று வாக்காளர்களுக்கு பலவிதமாக அரசியல் கட்சியினர் பணத்தையும், பரிசுப்பொருட்களையும் விநியோகம் செய்து வந்தனர்.
இப்போது பெண் வாக்காளர்களை கவர வெள்ளி கொலுசுகளை விநியோகம் செய்ய பதுக்கி வைத்திருந்த திமுக பிரமுகர் ஒருவர் பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கியுள்ளார். சேலம் தாதகாப்பட்டியில் இந்திராநகர் 55-வது வார்டு திமுக துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் (35) என்பவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைத்திருந்த வெள்ளிக் கொலுசுகள் பதுக்கி வைத்திருப்பதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பறக்கும் படை அதிகாரி முருகானந்தம், எஸ்ஐ ராஜமாணிக்கம் உள்ளிட்டோரை கொண்ட பறக்கும் படையினர், கோபாலகிருஷ்ணன் வீட்டில் சோதனை செய்தனர். உதயசூரியன் சின்னத்துடன் திமுக தலைவர் கருணாநிதி, அக் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரது படங்களுடன் தலா ஒரு செட் வெள்ளிக் கொலுசு அடங்கிய 105 பாக்கெட்டுகள் இருந்தது சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது. மொத்தம் 6 கிலோ எடையுள்ள வெள்ளிக் கொலுசுகளின் மொத்த விலை ரூ.3 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணனிடம், 35 நடத்திய முதல் கட்ட விசாரணையில், யாரேனும் ஆர்டர் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் வெள்ளிக் கொலுசுகளை பாக்கெட்டுகளில் தயார் செய்து வைத்துள்ளேன் என்றார். பறி முதல் செய்யப்பட்ட வெள்ளிக் கொலுசுகள் சேலம் தெற்கு சட்டசபை தொகுதி தேர்தல் நடத் தும் அலுவலரும் மாநக ராட்சி ஆணையருமான செல்வராஜிடம் ஒப்படைக்கப்பட்டன. கோபாலகிருஷ்ணன் மீது தேர்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு கேட்பது அரசியல்வாதிகளின் ஸ்டைல். இப்போது பெண்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்து ஓட்டு கேட்பது திமுக வின் நூதன யுக்தியோ? என்று சமூக வலைத்தளங்களின் கேள்வி எழுப்பியுள்ளனர் நெட்டிசிகள்.
No comments
Thank you for your comments