Breaking News

“இமெயில்” தந்தை ரே டாம்லின்சன் காலமானார்!

வாஷிங்டன், மார்ச் 7-
உலக அளவில் எல்லோராலும் இன்று உபயோகிக்கப்படும் இமெயிலின் முன்னோடியான ரே டாம்லின்சன் காலமானார். அவருக்கு வயது 74.

தந்தி மற்றும் தபால் சேவையின் மூலம் அஞ்சல் அனுப்பியது உள்பட அத்தனை பழங்கால வழக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்
"இமெயில்" எனப்படும் மின்னஞ்சல் முறையை கண்டுபிடித்தவர் ரேமண்ட் டாம்லின்சன்.

"@" என்னும் செயலியையும் கண்டறிந்து மெயில்களின் முகவரிக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ரே.

அர்பாநெட் சிஸ்டம் முறை:
அமெரிக்காவில் பிறந்து மாஸாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம்பெற்ற டாம்லின்சன் அர்பாநெட் சிஸ்டம் முறையில் நெட்ஒர்க் இணைப்பால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டரில் இருந்து இன்னொரு கம்ப்யூட்டருக்கு கடிதங்களை அனுப்பும் முறையை 1971 ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டுபிடித்தார்.

இமெயிலின் தந்தை:
பின்னர் @ குறியீட்டுடன் தூரத்தில் உள்ள இதர கம்ப்யூட்டர்களுக்கு அந்த தகவல்கள் போய்சேரும் புதிய தொழில்நுட்பத்தையும் வடிவமைத்தார். இன்று இமெயில் என்றழைக்கப்படும் இந்த செலவில்லாத துரிதமான கடிதப் போக்குவரத்தின் தந்தையாக விளங்கிய ரே டாம்லின்சன் தனது 74 ஆம் வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார்.

அனுதாபம் தெரிவித்த ஜிமெயில்:
அயராத உழைப்பு மற்றும் தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்கிய அவரது மறைவுக்கு உலகின் பலநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான இணையதளவாசிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கூகுளின் ஜிமெயில் குழுமமும் ரே டாம்லின்சன் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளது.

குவியும் இரங்கல்:
1978 ஆம் ஆண்டுவாக்கில் இந்த சேவையை மேலும் நவீனப்படுத்திய சிவா அய்யாத்துரை என்ற தமிழர் "இமெயில்" சேவைக்கான காப்புரிமையை 1982ம் ஆண்டு அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ரே டாம்லின்சன் மறைவிற்கு டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இரங்கல்கள் குவிந்து வருகின்றன.


No comments

Thank you for your comments