மல்ட்டிபிளக்ஸுகளில் சினிமா டிக்கெட் விலையை ரூ.120ஆக குறைக்கும் கர்நாடக அரசு
பெங்களூர், மார்ச் 9-
கர்நாடக மாநிலத்தில் உள்ள மல்ட்டிபிளக்ஸுகளில் யார் வேண்டுமானாலும்
படம் பார்த்துவிட முடியாது. காரணம் டிக்கெட் விலை பாக்கெட்டில் பெரிய ஓட்டை
போட்டு விடும் அளவுக்கு உள்ளது.
மல்ட்டிபிளக்ஸுகளில் டிக்கெட் விலை ரூ. 250 முதல் ரூ.300 வரை உள்ளது.
இதனால் மல்ட்டிபிளக்ஸுகளில் பெரும்பாலான நேரம் 38 முதல் 50 சதவீத
இருக்கைகள் மட்டுமே நிரம்பியிருக்கும்.
இந்நிலையில் சினிமா டிக்கெட்டுகளின் விலையை குறைக்குமாறு கன்னட பட
இயக்குனரும், தயாரிப்பாளருமான தயாள் பத்மநாபா தலைமையில் ஆன்லைன் மூலம் ஒரு
இயக்கம் ஆரம்பித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து
பார்க்குமாறு தயாள் மற்றும் கன்னட திரைப்பட சேம்பர் முதல்வர்
சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினர்.
டிக்கெட் விலையை குறைத்தால் தியேட்டருக்கு படம் பார்க்க வருபவர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் கன்னடம் மட்டும் இன்றி பிற மொழிப்
படங்களும் ஹிட்டாகும் என்று தயாள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மல்ட்டிபிளக்ஸுகளில் டிக்கெட்டுகளின் விலையை குறைத்து
அதிகபட்சமாக ரூ.120 ஆக ஆக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த
அறிவிப்பு வரும் 18ம் தேதி தாக்கல் செய்யப்படும் மாநில பட்ஜெட்டில்
இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்கு அரசு விலை நிர்ணயம் செய்துள்ளதை போன்று கர்நாடக அரசும் செய்ய உள்ளது என்று கூறப்படுகிறது.
No comments
Thank you for your comments